வேந்தன்கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின் போந்து, புறம்நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற, ஏந்து நெடு வால்கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார், இழுது எண்ணெய்; காந்து கடுந்தீக் கொளுத்தினார்; ஆர்த்தார், அண்டம் கடி கலங்க.
வேந்தன்கோயில் வாயிலொடும் - (இவ்வாறாக அனுமனைக் கயிறுகள்கொண்டு கட்டி இழுத்துக் கொண்டே) இராவணனது அரண்மனை வாயிலை;விரைவில் கடந்து - விரைவாகக் கடந்து சென்று; வெள்ளிடையின் போந்து- வெட்ட வெளியை அடைந்து; புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர்மறவர் - அனுமனைச் சுற்றி எப்புறத்தும் நின்று ஆரவாரஞ் செய்கின்றபொறுமையில்லாத அந்த அரக்கவீரர்கள்; ஏந்து நெடுவால் புறம் சுற்ற -எடுக்கப்படுகின்ற நீண்ட (அனுமனது) வாலில் எப்புறமும் சூழும் படி; கிழிசுற்றி முற்றும் இழுது எண்ணெய் தோய்த்தார் - பலவகைச் சீலைகளைக்கொண்டு சுற்றி அவ்வால் முழுவதையும் நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து; காந்து கடுந்தீ கொளுத்தினார் - (அதில்) எரியும் கொடியநெருப்பைக் கொளுத்தி; அண்டம் கடிகலங்க ஆர்த்தார் - அண்ட கோளம்முழுவதும் நிலைகுலையும்படிப் பெருமுழக்கமிட்டார்கள். அனுமன் வாலில்அரக்கர் செய்த செயல் கூறப்பட்டது. கிழி - சீலை;(துணி) இழுது - நெய். (123)