அனல் குளிர்ந்தமைகண்டு அனுமன் மகிழ்தல்

கலிவிருத்தம்

5932.

வெளுத்தமென் நகையவள் விளம்பும் ஏல்வையின்,
ஒளித்த வெங்கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தனமயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால்,
குளிர்த்தது, அக்குரிசில் வால், என்பு கூரவே.+

     வெளுத்த மென்நகையவள் - வெண்மையான மெல்லியபற்களை
உடைய பிராட்டி; விளம்பும் ஏல்வையின் - இவ்வாறு கூறிய போது; ஒளித்த
வெம் கனலவன் உள்ளம் உட்கினான் -
ஒளி பெற்ற வெவ்விய தீக்கடவுள்
மனத்தில் அச்சம் கொண்டான்; புறம் மயிர்தண்மையால் சிலிர்ப்ப -
(அவ்வளவில், அனுமனின்) உடலின் மேல் உள்ள உரோமங்கள் குளிர்ச்சியால்
புளகித்து; தளிர்த்தன - செழிப்புற்றன; அக்குரிசில் வால் - அந்தச் சிறந்த
அனுமனது வால்; என்பு கூர குளிர்த்தது - எலும்பு வரையிலும் மிகுதியாக
(உட்புறமும்) குளிர்ச்சியடைந்தது.

      தீக்கடவுளின்வெம்மை நீங்கினவுடன், அனுமனது மயிர்ப்புறம்
சிலிர்ப்பத்தளிர்த்தன; வால் என்பு கூரக் குளிர்ந்தது என்க. குரிசில் -
ஆண்டகையான அனுமான்.                                (128)