5940.

அப்பு உறழ்வேலைகாறும் அலங்கு பேர்
                        இலங்கைதன்னை,
எப் புறத்துஅளவும் தீய, ஒரு கணத்து எரித்த
                         கொட்பால்,
துப்பு உறழ் மேனிஅண்ணல், மேரு வில் குழைய,
                         தோளால்
முப்புரத்து எய்தகோலே ஒத்தது-அம் மூரிப் போர்
                          வால்.

     அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கை தன்னை -
நீர்மிக்க கடல் வரை விளங்கும் பெரிய இலங்கை நகரை,; எப்புறத்து
அளவும்தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் -
எல்லாப் பக்கங்களின்
எல்லைவரையிலும் எரிந்து போக ஒரு கண நேரத்தில் எரித்த திறமையால்;
அம்மூரிபோர்வால் - அனுமனுடைய அந்த வலிய போர்த்திறம்
உள்ளவாலானது;துப்பு
 உறழ் மேனி அண்ணல் -பவழம்போல் சிவந்த
திருமேனியை உடைய சிவபிரான்; மேருவில் குழைய - மேரு மலையாகிய
வில் வளைய; தோளால் - தனது தோள் வலியால்; முப்புரத்து எய்த
கோலே ஒத்தது -
திரிபுரங்களின் மீது தூண்டிய (திருமாலாகிய) அம்பே
போன்றிருந்தது.

     அனுமன் வாலுக்கு,முப்புரம் எரித்த அம்பு உவமை ஆயிற்று.
'முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்' என்ற
பட்டினத்தார் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. அனுமன், சிவபிரான் அமிசம்
என்பது உறுதிப்படுகின்றது.                                 (136)