5949. | ஆயது அங்குஓர் குறள் உரு ஆய், அடித் தாய் அளந்து,உலகங்கள் தரக் கொள்வான், மீ எழுந்தகரியவன் மேனியின், போய் எழுந்துபரந்தது-வெம் புகை. |
அங்கு ஓர் -அக்காலத்தில், முதலில் ஒரு; குறள் உரு ஆய் - வாமனவடிவாகச் சென்று; தர - (மாவலி தனக்குக்) கொடுக்க; உலகங்கள் அடி தாய் அளந்து கொள்வான் - மூவுலகங்களையும், தன் அடிகளால் தாவி அளந்து கொள்ளும் பொருட்டு; மீ எழுந்த கரியவன் மேனியின் - மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின் திரு மேனியைப் போல; வெம் புகை எழுந்து போய் பரந்தது ஆயது - வெப்பமான புகை, மேல் எழுந்து சென்று எங்கும் பரந்ததாக ஆயிற்று. மேல் எழுந்தகரும்புகை, உலகம் அளக்க எழுந்த திரிவிக்கிரமனான திருமாலைப் போல ஆயிற்று என்க. நிறத்தாலும், மேல் எழுதலாலும் வெம்புகை, திருமாலை ஒத்திருந்தது. (7) |