5970.

வரையினைப்புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
புரை இல் பொன்கலன் வில்லிட விசும்பிடைப்
                                 போவார்,
கரை இல் நுண்புகைப் படலையில் கரந்தனர்;
                                 கலிங்கத்
திரையினுள்பொலி சித்திரப் பாவையின் செயலார்.

     வரையினை புரைமாடங்கள் எரி புக - மலையை ஒத்த மிகப்
பெரியமாளிகைகளில் நெருப்புப் பற்றிக் கொள்ள; மகளிர் - அங்கிருந்த
அரக்கமாதர்கள்; புரை இல் பொன் கலன் வில்லிட - குற்றமற்ற அழகிய
பொன்மயமான தமது ஆபரணங்கள் ஒளி வீச; விசும்பிடை போவார் -
வானத்தில் எழுந்து சென்றவர்களாய்; கரை இல் நுண் புகை படலையில்
கரந்தனர் -
அளவு இல்லாத நுண்ணிய புகையின் திரளிலே மறைந்தார்கள்;
(அதனால், அவர்கள்) கலிங்கம் திரையினுள் பொலி சித்திரம் பாவையின்
செயலார் -
கலிங்க நாட்டில் நெய்த துணித் திரையின் உள்ளே விளங்குகின்ற
அழகிய பதுமையின் செயலை அடைந்தவர்களாயினர்.

     நுண்புகைத்தொகுதிக்கு, கலிங்கத்திரையும், அழகிய மகளிர்க்கு சித்திரப்
பதுமையும் உவமைகள். கலிங்கத்திரை - கலிங்க நாட்டுத் துணியால் ஆன
திரைச் சேலை. பாவை - பெண் போன்ற ஓவியம்.                  (28)