5981.

வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப்
போன போன திக்கு அறிகிலர், அனைவரும் 
                                  போனார்;
ஏனை நின்றவர்எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ்வானவர் பதி கொண்ட நாள் எனக்
                                 குலைந்தார்.

     வான மாதரும் -இராவணன்மாளிகையில் இருந்த தேவ மகளிரும்;
மற்றுள மகளிரும் -
மற்றும் உள்ள (இயக்க கந்தருவ வித்தியாதரர் முதலான)
பெண்களும்; அனைவரும் மறுகி - எல்லோரும் கலங்கி; போன போன
திக்கு அறிகிலர் போனார் -
அவரவர் போன திசை இன்னது என்று
அறியாதவர்களாய் நிலை கெட்டுச் சென்றனர்; ஏனை நின்றவர் எங்கணும்
இரிந்தனர் -
மற்றும் ஓடாமல் நின்றவர்கள் எங்கும் சுற்றித் திரிந்தவர்களாய்;
இலங்கை கோன் -
இலங்கைக்கு அரசனான இராவணன்; அவ்வானவர் பதி
கொண்ட நாள் என குலைந்தார் -
அந்தத் தேவர்களது தலைநகராகிய
அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல நிலை குலைந்தார்கள்.

     இராவணனதுமாளிகையைத் தீப்பற்றிய போது அங்கிருந்தவர்கள், பயந்து
ஓடியது பற்றிக் கூறப்பட்டது. மேக நாதன் செயல் தகப்பன் இராவணன் மேல்
ஏற்றிக் கூறப்பட்டது.                                       (39)