இராவணன்முதலியோர் வெளியேறுதல் 5985. | அனையகாலையில் அரக்கனும், அரிவையர் குழுவும், புனை மணிப்பொலி புட்பக விமானத்துப் போனார்; நினையும்மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும் வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. |
அனைய காலையில்- அவ்வாறுஇராவணன் மனை வேகின்ற அப்பொழுது; அரக்கனும், அரிவையர் குழுவும் - தலைமை அரக்கனாகிய இராவணனும், அவனது உரிமை மகளிர் கூட்டமும்; மணி புனை பொலி புட்பக விமானத்து போனார் - இரத்தினங்களால் அமைக்கப்பெற்று விளங்குகின்ற புட்பக விமானத்தில் ஏறி மேலே சென்றனர்; யாவரும் - இறந்தவர் போக மற்றைய அரக்கர்களும்; நினையும் மாத்திரை நீங்கினர் - நினைத்த அளவில் அவ்விடம் விட்டு அகன்றனர்; நினையும் வினை இலாமையின் - அவ்வாறு நினைக்கும் செயலைச் செய்யும் தன்மை தனக்கு இல்லாததால்; அவ்விலங்கல் மேல் இலங்கை வெந்தது - அந்த மலையின் மீது இருந்த இலங்கை நகர் வெந்து அழிந்தது. நினைத்ததைச்செய்யக் கூடியவர்கள் அரக்கர்கள். அஃறிணைப் பொருளாகிய இலங்கைநகர் அவ்வாறு செய்ய முடியாததால் நெருப்பில் வெந்து அழிந்தது என்பது கருத்து. நினையும் மாத்திரை - மிகச் சுருங்கிய காலம்; புட்பக விமானம் - இராவணனது வானவூர்தி. (43) |