6008. | மைந்நாகம்என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி, கைந் நாகம்அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை, பைந் நாகம்நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும், கொய்ந் நாகம்நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான். |
கை நாகம்அனையோன் - துதிக்கையை உடைய யானை போன்றவனான அனுமன்; மைநாகம் என்ன நின்ற குன்றையும் - மை நாகம் என்று சொல்லப் படுகின்ற இடை நின்ற மலையையும்; மரபின் எய்தி உற்றது உணர்த்தினன் - (முன் அதனிடம் சொல்லி வந்த) முறைப்படி அடைந்து, இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அதனிடம் கூறி; கணத்தின் காலை தன் நெடும் வரவு பார்க்கும் - ஒரு கணப் பொழுதிலே, நெடு நேரமாகத் தனது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; பை நாகம் நிகர்க்கும் - படம் எடுத்து எழுந்து நோக்கும் பாம்பு போன்ற; வீரர் - அங்கதன் முதலிய வானரவீரர்கள் நின்ற; கொய் நாகம் நறுந்தேன் சிந்தும் குன்றிடை - பறித்துஎடுக்கக் கூடிய சுர புன்னை மரங்களின் மலர்கள் தேனைச் சிந்திக்கொண்டிருக்கும் மகேந்திரமலையிலே; குதியும் கொண்டான் - குதித்தலையுஞ் செய்தான். பாம்பு, ஒன்றைஆவலோடு எதிர் பார்க்கும் போது, படம் எடுத்துக் கொண்டு எழுந்து நோக்கும் இயல்புடையது. அதனால் வானர வீரர்கள் அனுமனது வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு, பை நாகம் உவமையாக்கப்பட்டது. கணத்தின் காலை - காலத்தின் சிறிய அளவு; நாகம் - சுரபுன்னை. அனுமன், கடல் தாவிய செய்தி, ஒரு நீண்ட படலமாக விரிந்தது. ஆனால் அவன் திரும்பிய செய்தி இரண்டு பாடல்களில் முடிக்கப்பட்டுள்ளது. இது, கவிச்சக்கரவர்த்தியின் கதை அமைப்புத் திறனைக்காட்டுகின்றது. (2) |