6015. | ஆண்தகைதேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி, பூண்ட பேர்அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில் நீண்ட வாள்அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும்,விளம்பான்-தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி. |
ஆண்தகை -ஆண்மைக்குணம் நிறைந்த அனுமன்; தேவி உள்ளத்து அருந்தவம் - பிராட்டியின் மனத்தில் உள்ள அரிய தவமாகிய கற்பொழுக்கத்தை; அமைய சொல்லி - (அவர்களுக்கு விளங்கும்படித்) தெளிவாகச் சொல்லி; பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று - (பிராட்டி) அணிந்திருந்த (சூடாமணியாகிய) பெரிய அடையாளத்தைக் கையில் பெற்று வந்ததையும் சொல்லி; தன் வென்றியை தான் உரைப்ப வெள்கி - தனது வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல வெட்கப்பட்டு; போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் - யுத்தத்தில் நெடிய வாள்களை உடைய அரக்கர்களுடன் நடந்த செய்தியையும்; நெருப்பு சிந்தி மீண்டதும் - (இலங்கை முழுவதிலும்) நெருப்பைவைத்து விட்டுமீண்டு வந்த செய்தியையும்; விளம்பான் - சொல்லாமல் விட்டு விட்டான். தற்புகழ்ச்சிசெய்தல் மேன்மைக்கு இழுக்காம் ஆதலால், அரக்கரோடு நிகழ்ந்த போர்ச் செய்தியையும், இலங்கையில் நெருப்பு வைத்ததையும் அனுமன் சொல்லவில்லை. (9) |