அனைவரும்இராமபிரானைக்காண விரைதல்

 6017.

'யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது
                          இறையும் இல்லை;
சேவகன்தேவிதன்னைக் கண்டமை விரைவின்
                          செப்பி,
ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர்
                             ஆற்றலே ஆம்;
போவது புலமை' என்னா, பொருக்கென எழுந்து
                             போனார்.

     இனி வேறு எண்ணல்வேண்டுவது யாவதும் இறையும் இல்லை -
இனிமேல்,வேறு எண்ணிப் பார்க்க வேண்டியது, எதுவும் சிறிதும் இல்லை;
ஆவது சேவகன் தேவிதன்னை கண்டமை விரைவின் செப்பி - இனி நாம்
செய்யத்தக்கது மகாவீரனான இராமபிரானுடைய மனைவியாகிய சீதையைப்
பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; அவ் அண்ணல் - அந்த
இராமபிரானது,; உள்ளத்து அருந்துயர் ஆற்றலே ஆம் - மனத்தில் உள்ள,
போக்குதற்கு அரிய துன்பத்தைத் தணியச் செய்தலே ஆகும்; போவதே
புலமை என்னா -
(அதற்காக இனி இராமபிரானிடம்) செல்வதே அறிவுள்ள
செயலாகும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தினராய்க் கூறி; பொருக்
கென எழுந்து போனார் -
விரைவில் எழுந்து சென்றனர்.

     இது, எல்லா வானரவீரரும் ஒரு சேரத் தீர்மானித்துச் சென்ற செயலைக்
கூறுவதாகும். பொருக்கென விரைவுக் குறிப்பு.                       (11)