6019.

முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
                            முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
                            தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
                           ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
                           கொண்டாம்.

     வித்தகத் தூதன்- சதுரப்பாடுடைய தூதனாகிய அனுமன்; முத்தலை
எஃகினாற்கும் -
மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய
சிவபிரானுக்கும்; முடிப்ப அரும் கருமம் முற்றி - செய்து முடிப்பதற்கு
அருமையான காரியத்தை நிறைவேற்றி; மீண்டது இறுதியாய் - திரும்பி
வந்தது முடிவாக; அத்தலை விளைந்த தன்மை அறிந்த எல்லாம்
அறைந்தனம் -
அங்கு நிகழ்ந்த செயல்களை தெரிந்த வரையிலும்,
சொன்னோம்; இத்தலை ஆழியான் மாட்டு நிகழ்ந்த எல்லாம் - இனி,
இவ்விடத்தில் (கிட்கிந்தையில்) இராமபிரானிடத்தில் நடந்தனவற்றை எல்லாம்;
இயம்புவான் எடுத்துக் கொண்டாம் - சொல்வதற்குத் தொடங்கினோம்.

     இக்கவிதை,கவிக் கூற்று, முத்தலை எஃகினாற்கும் முடிப்பரும் கருமம்:-
இலங்கையை எரியூட்டுதல். செயற்கரும் காரியம்
 செய்தமையால் அனுமன்
வித்தகத்தூதன் எனப்பட்டான். வித்தகம் - திறமை. (சதுரப்பாடு)       (13)