அனுமன்,இராமனுக்குச் சீதையின்
நிலையைக்குறிப்பால் உணர்த்துதல்

6027.

என்புழி,அனுமனும், இரவி என்பவன்
தென் புறத்துஉளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக் கை அப் பொரு இ்ல் வீரனும்,
அன்புறுசிந்தையன், அமைய நோக்கினான்.

     என் புழி -என்று(இவ்வாறு இராமபிரான் சுக்கிரீவனை நோக்கி)
வினாவிய காலத்தில்; அனுமனும் -; இரவி என்பவன் தென் புறத்து உளன்
என தெரிவது ஆயினான் -
சூரியன் தெற்குத் திசையில் தோன்றியுள்ளான்
போல (அவர் கண்களில்) காணப்பட்டான்; பொன் பொழி தட கை அ
பொரு இல் வீரனும் -
அழகு ததும்பி வழியும் பெரிய கைகளை உடைய
ஒப்பற்ற வீரனான அந்த இராமபிரானும்; அன்புறு சிந்தையன் அமைய
நோக்கினான் -
அன்பு மிக்க மனத்தை உடையவனாய் நன்றாகப் பார்த்தான்.

     அனுமனைச்சூரியனாகவும், அவன் தென் திசையிலிருந்து வருவதால்,
சூரியன் தெற்கிலிருந்துவருவதாகவும் கூறப்பெற்றது. கிழக்கிலிருந்து
வரவேண்டியசூரியன், இப்போது தெற்குத் திக்கிலிருந்து வருகின்றான் என்று
நயம் படக்கூறப்பட்டது.                                    (21)