6044. | 'ஆயிடை,அணங்கின் கற்பும், ஐய ! நின் அருளும் செய்ய தூய நல் அறனும்என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப, போயினன்,அரக்கமாரை, "சொல்லுமின் பொதுவின்" என்று, ஆங்கு ஏயினன்; அவர்எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார். |
ஐய ! -ஐயனே!; ஆயிடை அணங்கின் கற்பும் - அப்பொழுது பிராட்டியின் கற்புத் திண்மையும்; நின் அருளும் செய்ய தூய நல் அறனும் - உனது அருளின் சிறப்பும் செம்மையும், தூய்மையும் நன்மையும் நிறைந்த அறமும்; என்று இனையன தொடர்ந்து காப்ப - என்று சொல்லத்தக்க இவைகள் எல்லாம் பிராட்டியின் உயிரை விடாமல் பாதுகாக்க; ஆங்கு - அப்பொழுது, (இராவணன்); அரக்கிமாரை - (அருகில் காவல் செய்து கொண்டிருக்கும்) அரக்கியர்களை; பொதுவின் சொல்லுமின் - நன்மை விளைதலும் தீய பயத்தலுமான வார்த்தைகளைப் பொதுப் படக் கூறுங்கள்; என்று ஏயினன் - என்று கட்டளையிட்டு; போயினன் - விட்டுத் தன்னிடத்துக்குச் சென்றான்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் - அந்த அரக்கியரெல்லாம் நான் உச்சரித்த மந்திரத்தின் வலிமையால் தூங்கிவிட்டார்கள். அனுமன்,பிராட்டியைத் தான் கண்டு பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பினை விவரிக்கின்றான். கோறல் மேற்கொண்டுவிட்ட இராவணனது கொடுமையினின்றும், பிராட்டியைக் காத்த சக்திகளையும் அனுமன் விவரித்துள்ளான். 'என்று இங்கு' - இங்கு இசை நிறைக்க வந்தஅசை நிலை. (38) |