6045. | 'அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக உன்னினள்; கொடிஒன்று ஏந்தி, கொம்பொடும் உறைப்பச் சுற்றி, தன் மணிக்கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து, நாயேன், பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற போழ்தில், |
அன்னது ஓர்பொழுதில் - அத்தன்மையதானசமயத்தில்; நங்கை - பிராட்டி; ஆர் உயிர் துறப்பதாக உன்னினன் - அருமையான தனது உயிரைவிட்டு விடுவதாக நினைத்தவளாய்; கொடி ஒன்று ஏந்தி கொம் பொடும் உறைப்ப சுற்றி - ஒரு கொடியைக் கையில் எடுத்து ஒரு மரத்தின் கிளையில் உறுதியாகக் கட்டி; தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் -தனது அழகிய கழுத்திலே சேர்த்துச் சுருக்கிட்டுக் கொள்ளும் சமயத்தில்; நாயேன் தடுத்து - எளியனான அடியேன் அதனைத் தடை செய்வதாகி; பொன் அடி வணங்கி நின்று - பிராட்டியின் திருவடிகளை வணங்கி நின்று; நின் பெயர் புகன்ற போழ்தில் - உனது திருநாமத்தைச் சொன்ன பொழுதில். குளகமாக அமைந்தஇச்செய்யுள் தொடர், அடுத்த செய்யுளில் சொன்னாள் என்று முடியும். இராமபிரான் திருநாமத்தை அனுமான் உச்சரித்ததே, பிராட்டி சுருக்கிட்டுக் கொண்டு உயிர் மாய்ப்பதைத் தடுத்தது என்க. (39) |