6047. | 'அறிவுறத்தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும், செறிவுறநோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவு அற எண்ணி,வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்; இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய் ! |
எந்தாய் -எமதுதலைவனே !; அறிவு உற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் - பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன பெரிய அடையாளங்களை எல்லாம்; செறிவு உற நோக்கி - அதனைப் பொருத்தமாகப் பார்த்து; நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவு அற எண்ணி - அடியேன் மனத்தில் மாறுபாடுஇல்லாமையை கேடின்றி யோசித்து; வண்ண மோதிரம் காட்ட கண்டாள் - அழகிய (உனது) மோதிரத்தை, நான் காட்ட, பார்த்தாள்; அனையது - அந்த மோதிரம்; இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது - உயிர் போகும் முடிவுக் காலத்தில், உயிரை இறவாத படி நிலை நிறுத்திக் காக்கின்ற (மிருத சஞ்சீவி என்னும்) மருந்தைப் போன்றது. 'மோதிரம்பிராட்டிக்கு உயிர் தந்து ஈயும் மருந்தானது' என்பது, 'வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆயது வாழி மணி அழி' என்ற (கம்ப. 5296) காட்சியை நினைத்து அனுமன் சொன்னதாகும். (41) |