6051. | 'இங்கு உளதன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்; அங்கு உள தன்மைஎல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்; "திங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்தபின்னை, மங்குவென்உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி வைத்தாள். |
இங்கு உள தன்மைஎல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள் - இவ்விடத்தில் உள்ளனவான நிலைமைகள் எல்லாவற்றையும் நடந்தபடியே (நிகழ்ந்த முறையில்) பொருந்தக் கேட்டு; அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள் - அவ்விடத்தில் உள்ள நிலைமைகளை எல்லாம், அடியவனாகிய எனக்குத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகக் கூறினாள்; இன்னே திங்கள் ஒன்று இருப்பென் - (மேலும்) இந்த இடத்தில் ஒரு மாத காலம் உயிர் வைத்திருப்பேன்; திருவுளம் தீர்ந்த பின்னை - (அதற்குள் என்னை மீட்க எம்பெருமானுக்கு) மனம் இல்லையாகுமானால், அதன் பின்பு; உயிரோடு மங்குவென் என்று உன் மலரடி சென்னிவைத்தாள் - உயிரிழப்பேன் என்று சொல்லி, உனது தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தலைமீது வைத்து (வணங்குவது போல) வணங்கிச் சொன்னாள். பிராட்டி, தன்னைமீட்கக் காலக் கெடு வைத்ததை அனுமன் சொன்னானாயிற்று. 'மலரடி சென்னி வைத்தாள்' பாவனை. (45) |