கோவிந்தையார் இலம்பகம்
 
409.
  • ஆர்வ வேர் அரிந்து அச்சணந்தி போய்
  • வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
  • மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச்
  • சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்
   
410.
  • நம்பன் இத் தலை நாக நல் நகர்
  • பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும்
  • செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும்
  • வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே
   
411.
  • கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
  • சிலையினது அகலமும் வீணைச் செல்வமும்
  • மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ்
  • உலகினில் இலை என ஒருவன் ஆயினான்
   
412.
  • நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக்
  • காமனே எனக் கன்னி மங்கையர்
  • தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம்
  • கோ மகன் திறத்து உற்ற கூறுவாம்
   
413.
  • சில்லம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
  • முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை
  • புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும்
  • கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே
   
414.
  • மிக்க நாளினால் வேழம் மும் மதம்
  • உக்க தேனினோடு ஊறி வார் சுனை
  • ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
  • மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்
   
415.
  • மன்னவன் நிரை வந்து கண் உறும்
  • இன்ன நாளினால் கோடும் நாம் எனச்
  • சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
  • முன்னம் கூறினான் முழுது உணர்வினான்
   
416.
  • அடைதும் நாம் நிரை அடைந்த காலையே
  • குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை
  • உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
  • உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே
   
417.
  • என்று கூறலும் ஏழை வேட்டுவீர்
  • ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
  • என்று கூறினும் ஒருவன் என் செயும்
  • இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார்
   
418.
  • வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
  • தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ
  • விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
  • மண்டினார் நிரை மணந்த காலையே
   
419.
  • பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
  • ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
  • கோத்த நித்திலக் கோதை மார்பினான்
  • வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான்
   
420.
  • பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
  • எள்ளன்மின் நிரை இன்று நீர் என
  • வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
  • முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்
   
421.
  • காய மீன் எனக் கலந்து கான் நிரை
  • மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
  • பாய மாரிபோல் பகழி சிந்தினார்
  • ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்
   
422.
  • குழலும் நவியமும் ஒழியக் கோவலர்
  • பகழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து
  • உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
  • மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார்
   
423.
  • மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
  • அத்தலை விடின் இத்தலை விடார்
  • உய்த்தனர் என உடை தயிர்ப் புளி
  • மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்
   
424.
  • வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம்
  • முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
  • தலைப் படு தண் மலர் மாலை பிணங்க
  • அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார்
   
425.
  • எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
  • நும் அனைமார்களை நோவ அதுக்கி
  • வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத்
  • தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார்
   
426.
  • பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
  • ஆறு படப் பள்ளி ஆகுலம் ஆக
  • மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது
  • சேறு படு மலர் சிந்த விரைந்தே
   
427.
  • புறவு அணி பூ விரி புன் புலம் போகி
  • நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச்
  • சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
  • இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல்
   
428.
  • கொடு மர எயினர் ஈண்டிக்
  • கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
  • படு மணி நிரையை வாரிப்
  • பைந் துகில் அருவி நெற்றி
  • நெடு மலை அத்தம் சென்றார் என்று
  • நெய் பொதிந்த பித்தை
  • வடி மலர் ஆயர் பூசல்
  • வள நகர் பரப்பினாரே
   
429.
  • காசு இல் மா மணிச் சாமரை கன்னியர்
  • வீசு மா மகரக் குழை வில் இட
  • வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
  • ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்
   
430.
  • கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
  • சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை
  • உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக்
  • கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான்
   
431.
  • செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
  • வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
  • செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
  • அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்
   
432.
  • கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
  • மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
  • காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
  • ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே
   
433.
  • கார் விளை மேகம் அன்ன
  • கவுள் அழி கடாத்த வேழம்
  • போர் விளை இவுளித் திண் தேர்
  • புனைமயிர்ப் புரவி காலாள்
  • வார் விளை முரசம் விம்ம
  • வான் உலாப் போந்ததே போல்
  • நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப
  • நிலம் நெளி பரந்த அன்றே
   
434.
  • கால் அகம் புடைப்ப முந்நீர்க்
  • கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
  • வேல் அகம் மிடைந்த தானை
  • வெம் சின எயினர் தாக்க
  • வால் வளை அலற வாய் விட்டு
  • இரலையும் துடியும் ஆர்ப்பப்
  • பால் வளைந்து இரவு செற்றுப்
  • பகலொடு மலைவது ஒத்தார்
   
435.
  • வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய
  • வெம் நுனைப் பகழி மைந்தர்
  • மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம்
  • கொண்டு வைகச் செந்நாச்
  • சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை
  • சொல்லலாம் தன்மைத்து அன்றிக்
  • கொல் பழுத்து எரியும் வேலார்
  • கொடுஞ் சிலை குழைவித்தாரே
   
436.
  • வாள் படை அனுங்க வேடர்
  • வண் சிலை வளைய வாங்கிக்
  • கோள் புலி இனத்தின் மொய்த்தார்
  • கொதி நுனைப் பகழி தம்மால்
  • வீட்டினார் மைந்தர் தம்மை
  • விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
  • பாட்டு அரும் பகடு வீழ்ந்த
  • பனிவரை குனிவது ஒத்தே
   
437.
  • வென்றி நாம் கோடும் இன்னே
  • வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி
  • ஒன்றி உள் வாங்குக என்ன
  • ஒலி கடல் உடைந்ததே போல்
  • பொன் தவழ் களிறு பாய்மா
  • புனை மயில் குஞ்சி பிச்சம்
  • மின் தவழ் கொடியொடு இட்டு
  • வேல் படை உடைந்த அன்றே
   
438.
  • பல்லினால் சுகிர்ந்த நாரில்
  • பனிமலர் பயிலப் பெய்த
  • முல்லை அம் கண்ணி சிந்தக்
  • கால் விசை முறுக்கி ஆயர்
  • ஒல் என ஒலிப்ப ஓடிப் படை
  • உடைந்திட்டது என்ன
  • அல்லல் உற்று அழுங்கி
  • நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான்
   
439.
  • வம்பு கொண்டு இருந்த மாதர்
  • வன முலை மாலைத் தேன் சோர்
  • கொம்பு கொண்டு அன்ன நல்லார்
  • கொழுங் கயல் தடங் கண் போலும்
  • அம்பு கொண்டு அரசர் மீண்டார்
  • ஆக் கொண்டு மறவர் போனார்
  • செம்பு கொண்டு அன்ன இஞ்சித்
  • திருநகர்ச் செல்வ என்றார்
   
440.
  • மன் நிரை பெயர்த்து மைந்தர்
  • வந்தனர் கொள்க வாள்கண்
  • பொன் இழை சுடரும் மேனிப்
  • பூங் கொடி அனைய பொற்பில்
  • கன்னியைத் தருதும் என்று
  • கடி முரசு இயம்பக் கொட்டி
  • நல் நகர் வீதி தோறும்
  • நந்த கோன் அறை வித்தானே
   
441.
  • வெதிர்ங் குதைச் சாபம் கான்ற
  • வெம் நுனைப் பகழி மூழ்க
  • உதிர்ந்தது சேனை ஈட்டம்
  • கூற்றொடு பொருது கொள்ளும்
  • கருந் தடங் கண்ணி அன்றிக்
  • காயம் ஆறு ஆக ஏகும்
  • அரும் பெறல் அவளும் ஆகென்று
  • ஆடவர் தொழுது விட்டார்
   
442.
  • கார் விரி மின் அனார் மேல்
  • காமுகர் நெஞ்சி னோடும்
  • தேர் பரி கடாவித் தேம் தார்ச்
  • சீவகன் அருளில் போகித்
  • தார் பொலி புரவி வட்டம்
  • தான் புகக் காட்டு கின்றாற்கு
  • ஊர் பரிவுற்றது எல்லாம்
  • ஒரு மகன் உணர்த்தினானே
   
443.
  • தன் பால் மனையாள் அயலான்
  • தலைக் கண்டு பின்னும்
  • இன் பால் அடிசில் இவர்கின்ற
  • கைப் பேடி போலாம்
  • நன்பால் பசுவே துறந்தார்
  • பெண்டிர் பாலர் பார்ப்பார்
  • என்பாரை ஓம்பேன் எனின்
  • யான் அவன் ஆக என்றான்
   
444.
  • போர்ப் பண் அமைத்து நுகம்
  • பூட்டிப் புரவி பண்ணித்
  • தேர்ப் பண் அமைத்துச் சிலை
  • கோலிப் பகழி ஆய்ந்து
  • கார்க் கொண்மூ மின்னி
  • நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
  • பார்க் கண் எழுந்த துகளால்
  • பகல் மாய்ந்தது அன்றே
   
445.
  • இழுது ஒன்று வாள் கண்
  • இளையார் இளையார்கண் நோக்கின்
  • பழுது இன்றி மூழ்கும்
  • பகழித் தொழில் வல்ல காளை
  • முழுது ஒன்று திண் தேர்
  • முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
  • பொழுது அன்று போதும் எனப்
  • புள் மொழிந்தான் மொழிந்தான்
   
446.
  • மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல்
  • காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
  • ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல்
  • வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே
   
447.
  • கடல் படை அனுங்க வென்ற
  • கானவர் என்னும் கூற்றத்து
  • இடைப் படாது ஓடிப் போமின் உய்ய
  • என்று இரலை வாய் வைத்து
  • எடுத்தனர் விளியும் சங்கும்
  • வீளையும் பறையும் கோடும்
  • கடத்து இடை முழங்கக் காரும்
  • கடலும் ஒத்து எழுந்த அன்றே
   
448.
  • கை விசை முறுக்கி வீசும்
  • கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
  • செய் கழல் குருசில் திண் தேர்
  • விசையொடு திசைகள் எல்லாம்
  • ஐ என வளைப்ப வீரர்
  • ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
  • மொய் அமர் நாள் செய்து ஐயன்
  • முதல் விளையாடினானே
   
449.
  • ஆழியான் ஊர்திப் புள்ளின்
  • அம் சிறகு ஒலியின் நாகம்
  • மாழ்கிப் பை அவிந்த வண்ணம்
  • வள்ளல் தேர் முழக்கினானும்
  • சூழ்துகள் மயக்கத்தானும்
  • புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
  • கோழி போல் குறைந்து நெஞ்சின்
  • அறம் என மறமும் விட்டார்
   
450.
  • புள் ஒன்றே சொல்லும் என்று இப்
  • புன்தலை வேடன் பொய்த்தான்
  • வெள்ளம் தேர் வளைந்த நம்மை
  • வென்றி ஈங்கு அரிது வெய்தா
  • உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு
  • எடுத்து உய்ய என்னா
  • வள்ளல் மேல் அப்பு மாரி
  • ஆர்ப்பொடு சிதறினாரே
   
451.
  • மால் வரைத் தொடுத்து வீழ்ந்த
  • மணிநிற மாரி தன்னை
  • கால் இரைத்து எழுந்து பாறக்
  • கல் எனப் புடைத்ததே போல்
  • மேல் நிரைத்து எழுந்த வேடர்
  • வெம் நுனை அப்பு மாரி
  • கோல் நிரைத்து உமிழும் வில்லால்
  • கோமகன் விலக்கினானே
   
452.
  • கானவர் இரிய வில்வாய்க்
  • கடுங் கணை தொடுத்தலோடும்
  • ஆன்நிரை பெயர்ந்த ஆயர்
  • ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
  • தான் ஒன்று முடங்கிற்று ஒன்று
  • நிமிர்ந்தது சரம் பெய் மாரி
  • போல் நின்ற என்ப மற்று அப்
  • பொருவரு சிலையினார்க்கே
   
453.
  • ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
  • மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர்
  • கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
  • மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்
   
454.
  • வாள் வாயும் இன்றி வடி
  • வெம் கணை வாயும் இன்றிக்
  • கோள் வாய் மதியம் நெடியான்
  • விடுத்த ஆங்கு மைந்தன்
  • தோள் வாய் சிலையின் ஒலியால்
  • தொறு மீட்டு மீள்வான்
  • நாள் வாய் நிறைந்த நகை
  • வெண் மதி செல்வது ஒத்தான்
   
455.
  • ஆள் அற்றம் இன்றி அலர் தார்
  • அவன் தோழ ரோடும்
  • கோள் உற்ற கோவன் நிரை
  • மீட்டனன் என்று கூற
  • வாள் உற்ற புண்ணுள் வடி
  • வேல் எறிந்திற்றதே போல்
  • நாள் உற்று உலந்தான் வெகுண்டான்
  • நகர் ஆர்த்தது அன்றே
   
456.
  • இரவி தோய் கொடி கொள் மாடத்து
  • இடுபுகை தவழச் சுண்ணம்
  • விரவிப் பூந் தாமம் நாற்றி
  • விரை தெளித்து ஆரம் தாங்கி
  • அரவு உயர் கொடியினான் தன்
  • அகன் படை அனுங்க வென்ற
  • புரவித் தேர்க் காளை அன்ன
  • காளையைப் பொலிக என்றார்
   
457.
  • இன் அமுது அனைய செவ்வாய்
  • இளங் கிளி மழலை அம் சொல்
  • பொன் அவிர் சுணங்கு பூத்த
  • பொங்கு இள முலையினார் தம்
  • மின் இவர் நுசுப்பு நோவ
  • விடலையைக் காண ஓடி
  • அன்னமும் மயிலும் போல
  • அணி நகர் வீதி கொண்டார்
   
458.
  • சில்லரிச் சிலம்பின் வள் வார்ச்
  • சிறுபறை கறங்கச் செம்பொன்
  • அல்குல் தேர் அணிந்து கொம்மை
  • முலை எனும் புரவி பூட்டி
  • நெல் எழில் நெடுங் கண் அம்பாப்
  • புருவவில் உருவக் கோலிச்
  • செல்வப் போர்க் காமன் சேனை
  • செம்மல் மேல் எழுந்தது அன்றே
   
459.
  • நூல் பொர அரிய நுண்மை
  • நுசுப்பினை ஒசிய வீங்கிக்
  • கால் பரந்து இருந்த வெம்கண்
  • கதிர் முலை கச்சின் வீக்கிக்
  • கோல் பொரச் சிவந்த கோல
  • மணிவிரல் கோதை தாங்கி
  • மேல் வரல் கருதி நின்றார்
  • விண்ணவர் மகளிர் ஒத்தார்
   
460.
  • ஆகமும் இடையும் அஃக
  • அடி பரந்து எழுந்து வீங்கிப்
  • போகமும் பொருளும் ஈன்ற
  • புணர் முலைத் தடங்கல் தோன்றப்
  • பாகமே மறைய நின்ற
  • படை மலர்த் தடங் கண் நல்லார்
  • நாகம் விட்டு எழுந்து போந்த
  • நாகர் தம் மகளிர் ஒத்தார்
   
461.
  • வாள் அரம் துடைத்த வைவேல்
  • இரண்டு உடன் மலைந்தவே போல்
  • ஆள் வழக்கு ஒழிய நீண்ட
  • அணிமலர்த் தடங்கண் எல்லாம்
  • நீள் சுடர் நெறியை நோக்கும்
  • நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
  • காளைதன் தேர் செல் வீதி
  • கலந்து உடன் தொக்க அன்றே
   
462.
  • வடகமும் துகிலும் தோடும்
  • மாலையும் மணியும் முத்தும்
  • கடகமும் குழையும் பூணும்
  • கதிர் ஒளி கலந்து மூதூர்
  • இடவகை எல்லை எல்லாம்
  • மின் நிரைத்து இட்டதே போல்
  • பட அரவு அல்குலாரைப்
  • பயந்தன மாடம் எல்லாம்
   
463.
  • மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப்
  • போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
  • தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
  • தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார்
   
464.
  • கொடையுளும் ஒருவன் கொல்லும்
  • கூற்றினும் கொடிய வாள் போர்ப்
  • படையுளும் ஒருவன் என்று
  • பயம் கெழு பனுவல் நுண் நூல்
  • நடையுளார் சொல்லிற்று எல்லாம்
  • நம்பி சீவகன்கண் கண்டாம்
  • தொடையல் அம் கோதை என்று
  • சொல்லுபு தொழுது நிற்பார்
   
465.
  • செம்மலைப் பயந்த நல் தாய்
  • செய்தவம் உடையாள் என்பார்
  • எம் மலைத் தவம் செய்தாள் கொல்
  • எய்துவம் யாமும் என்பார்
  • அம் முலை அமுதம் அன்னார்
  • அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
  • தம் உறு விழும வெம் நோய்
  • தம் துணைக்கு உரைத்து நிற்பார்
   
466.
  • சினவுநர்க் கடந்த செல்வன்
  • செம் மலர் அகலம் நாளைக்
  • கனவினில் அருளி வந்து
  • காட்டி யாம் காண என்பார்
  • மனவு விரி அல்குலார் தம்
  • மனத்தொடு மயங்கி ஒன்றும்
  • வினவுநர் இன்றி நின்று
  • வேண்டுவ கூறுவாரும்
   
467.
  • விண் அகத்து உளர் கொல் மற்று இவ்
  • வென்றி வேல் குருசில் ஒப்பார்
  • மண் அகத்து இவர்கள் ஒவ்வார்
  • மழ களிறு அனைய தோன்றல்
  • பண் அகத்து உறையும் சொல்லார்
  • நல் நலம் பருக வேண்டி
  • அண்ணலைத் தவத்தில் தந்தார்
  • யார் கொலோ அளியர் என்பார்
   
468.
  • வட்டு உடைப் பொலிந்த தானை
  • வள்ளலைக் கண்ட போழ்தே
  • பட்டு உடை சூழ்ந்த காசு
  • பஞ்சி மெல் அடியைச் சூழ
  • அட்ட அரக்கு அனைய செவ்வாய்
  • அணி நலம் கருகிக் காமக்
  • கட்டு அழல் எறிப்ப நின்றார்
  • கை வளை கழல நின்றார்
   
469.
  • வார் செலச் செல்ல விம்மும்
  • வனமுலை மகளிர் நோக்கி
  • ஏர் செலச் செல்ல ஏத்தித்
  • தொழுது தோள் தூக்க இப்பால்
  • பார் செலச் செல்லச் சிந்திப்
  • பைந்தொடி சொரிந்த நம்பன்
  • தேர் செலச் செல்லும் வீதி பீர்
  • செலச் செல்லும் அன்றே
   
470.
  • வாள் முகத்து அலர்ந்த போலும்
  • மழை மலர்த் தடங்கண் கோட்டித்
  • தோள் முதல் பசலை தீரத்
  • தோன்றலைப் பருகுவார் போல்
  • நாள் முதல் பாசம் தட்ப
  • நடுங்கினார் நிற்ப நில்லான்
  • கோள் முகப் புலியோடு ஒப்பான்
  • கொழுநிதிப் புரிசை புக்கான்
   
471.
  • பொன் நுகம் புரவி பூட்டு
  • விட்டு உடன் பந்தி புக்க
  • மன்னுக வென்றி என்று
  • மணிவள்ளம் நிறைய ஆக்கி
  • இன்மதுப் பலியும் பூவும்
  • சாந்தமும் விளக்கும் ஏந்தி
  • மின் உகு செம் பொன் கொட்டில்
  • விளங்கு தேர் புக்கது அன்றே
   
472.
  • இட்ட உத்தரியம் மெல்லென்று
  • இடை சுவல் வருத்த ஒல்கி
  • அட்ட மங்கலமும் ஏந்தி
  • ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
  • பட்டமும் குழையும் மின்னப்
  • பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
  • மட்டு அவிழ் கோதை மாதர்
  • மைந்தனைக் கொண்டு புக்கார்
   
473.
  • தாய் உயர் மிக்க தந்தை
  • வந்து எதிர் கொண்டு புக்குக்
  • காய் கதிர் மணி செய் வெள் வேல்
  • காளையைக் காவல் ஓம்பி
  • ஆய் கதிர் உமிழும் பைம் பூண்
  • ஆயிரச் செங் கணான்தன்
  • சேய் உயர் உலகம் எய்தி
  • அன்னது ஓர் செல்வம் உற்றார்
   
474.
  • தகை மதி எழிலை வாட்டும்
  • தாமரைப் பூவின் அங்கண்
  • புகை நுதி அழல வாள் கண்
  • பொன் அனாள் புல்ல நீண்ட
  • வகை மலி வரை செய் மார்பின்
  • வள்ளலைக் கண்டு வண் தார்த்
  • தொகை மலி தொறுவை ஆளும்
  • தோன்றல் மற்று இன்ன கூறும்
   
475.
  • கேட்டு இது மறக்க நம்பி
  • கேள் முதல் கேடு சூழ்ந்த
  • நாட்டு இறை விசையை என்னும்
  • நாறு பூம் கொம்பு அனாளை
  • வேட்டு இறைப் பாரம் எல்லாம்
  • கட்டியங் காரன் தன்னைப்
  • பூட்டி மற்று அவன் தனாலே
  • பொறி முதல் அடர்க்கப் பட்டான்
   
476.
  • கோல் இழுக்கு உற்ற ஞான்றே
  • கொடு முடி வரை ஒன்று ஏறிக்
  • கால் இழுக்கு உற்று வீழ்ந்தே
  • கருந் தலை களையல் உற்றேன்
  • மால் வழி உளது அன்று ஆயின்
  • வாழ்வினை முடிப்பல் என்றே
  • ஆலம் வித்து அனையது எண்ணி
  • அழிவினுள் அகன்று நின்றேன்
   
477.
  • குலத் தொடு முடிந்த கோன்தன்
  • குடி வழி வாரா நின்றேன்
  • நலத் தகு தொறுவின் உள்ளேன்
  • நாமம் கோவிந்தன் என்பேன்
  • இலக்கணம் அமைந்த கோதாவரி
  • என இசையில் போந்த
  • நலத்தகு மனைவி பெற்ற
  • நங்கை கோவிந்தை என்பாள்
   
478.
  • வம்பு உடை முலையினாள் என்
  • மட மகள் மதர்வை நோக்கம்
  • அம்பு அடி இருத்தி நெஞ்சத்து
  • அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
  • கொம்படு நுசுப்பினாளைக்
  • குறை இரந்து உழந்து நின்ற
  • நம்படை தம்முள் எல்லாம்
  • நகை முகம் அழிந்து நின்றேன்
   
479.
  • பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
  • சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
  • ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
  • வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்
   
480.
  • வெண்ணெய் போன்று ஊறு இனியள்
  • மேம் பால் போல் தீம் சொல்லள்
  • உண்ண உருக்கிய வான்
  • நெய் போல் மேனியள்
  • வண்ண வனமுலை
  • மாதர் மட நோக்கி
  • கண்ணும் கருவிளம் போது
  • இரண்டே கண்டாய்
   
481.
  • சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
  • பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
  • போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
  • யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்
   
482.
  • குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
  • நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
  • நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
  • இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே
   
483.
  • கன்னியர் குலத்தின் மிக்கார்
  • கதிர் முலைக் கன்னி மார்பம்
  • முன்னினர் முயங்கின் அல்லான்
  • முறி மிடை படலை மாலைப்
  • பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை
  • முன் புணர்தல் செல்லார்
  • இன்னதான் முறைமை மாந்தர்க்கு
  • என மனத்து எண்ணினானே
   
484.
  • கோட்டு இளங் களிறு போல்வான்
  • நந்தகோன் முகத்தை நோக்கி
  • மோட்டுஇள முலையினாள் நின்
  • மட மகள் எனக்கு மாமான்
  • சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என்
  • செய்வான் இவைகள் சொல்லி
  • நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு
  • அகம் குளிர்ப்பச் சொன்னான்
   
485.
  • தேன் சொரி முல்லைக் கண்ணிச்
  • செந் துவர் ஆடை ஆயர்
  • கோன் பெரிது உவந்து போகிக்
  • குடை தயிர் குழுமப் புக்கு
  • மான் கறி கற்ற கூழை மௌவல்
  • சூழ் மயிலைப் பந்தர்க்
  • கான் சொரி முல்லைத் தாரான்
  • கடிவினை முடிக என்றான்
   
486.
  • கனிவளர் கிளவி காமர்
  • சிறு நுதல் புருவம் காமன்
  • குனி வளர் சிலையைக் கொன்ற
  • குவளைக் கண் கயலைக் கொன்ற
  • இனி உளர் அல்லர் ஆயர்
  • எனச் சிலம்பு அரற்றத் தந்து
  • பனி வளர் கோதை மாதர்
  • பாவையைப் பரவி வைத்தார்
   
487.
  • நாழியுள் இழுது நாகு ஆன் கன்று
  • தின்று ஒழிந்த புல் தோய்த்து
  • ஊழி தொறு ஆவும் தோழும்
  • போன்று உடன் மூக்க என்று
  • தாழ் இரும் குழலினாளை
  • நெய்தலைப் பெய்து வாழ்த்தி
  • மூழை நீர் சொரிந்து மொய் கொள்
  • ஆயத்தியர் ஆட்டினாரே
   
488.
  • நெய் விலைப் பசும் பொன் தோடும்
  • நிழல் மணிக் குழையும் நீவி
  • மை விரி குழலினாளை
  • மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
  • பெய்தனர் பிணையல் மாலை
  • ஓரிலைச் சாந்து பூசிச்
  • செய்தனர் சிறு புன் கோலம்
  • தொறுத்தியர் திகைத்து நின்றார்
   
489.
  • ஏறம் கோள் முழங்க ஆயர்
  • எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
  • சாறு எங்கும் அயரப் புக்கு
  • நந்தகோன் தன்கை ஏந்தி
  • வீறு உயர் கலச நல்நீர்
  • சொரிந்தனன் வீரன் ஏற்றான்
  • பாறு கொள் பருதி வைவேல்
  • பதுமுக குமரற்கு என்றே
   
490.
  • நலத் தகை அவட்கு நாகு ஆன்
  • ஆயிரம் திரட்டி நன்பொன்
  • இலக்கணப் பாவை ஏழும்
  • கொடுத்தனன் போல இப்பால்
  • அலைத்தது காமன் சேனை
  • அரு நுனை அம்பு மூழ்க
  • முலைக் குவட்டு இடைப் பட்டு
  • ஆற்றான் முத்து உக முயங்கினானே
   
491.
  • கள் வாய் விரிந்த கழுநீர்
  • பிணைந்து அன்ன வாகி
  • வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண்
  • விரை நாறு கோதை
  • முள்வாய் எயிற்று ஊறு அமுதம்
  • முனியாது மாந்திக்
  • கொள்ளாத இன்பக் கடல் பட்டனன்
  • கோதை வேலான்
   
492.
  • தீம் பால் கடலைத் திரை
  • பொங்கக் கடைந்து தேவர்
  • தாம் பால் படுத்த அமிர்தோ
  • தட மாலை வேய்த் தோள்
  • ஆம் பால் குடவர் மகளோ
  • என்று அரிவை நைய
  • ஓம்பா ஒழுக்கத்து உணர்வு
  • ஒன்று இலன் ஆயினானே