சுக்ரீவன் கும்பன் போர் | | 7962. | குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த வெம் போர் அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார், மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என மலையாநின்றார்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர். | குரங்கினுக்கு அரசும் - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்; வென்றிக்கும்பனும் - வெற்றி உடைய கும்பன் என்னும் (அரக்கர் தலைவனும்); குறித்த வெம்போர் - (அங்குக்)குறித்துச் செய்த கொடியபோர்; அரங்கினுக்கு அழகுசெய்ய - அப்போர்க் களத்திற்கு அழகினைச் செய்ய; ஆயிரம் சாரி போந்தார் - ஆயிரம் முறை (என்னும் அளவு) வலசாரி, இடசாரியாகச் சுற்றிச் சுற்றிவந்தார்கள்; மரம்கொடும் - (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும் - தண்டாயுதம் கொண்டும்; மலைஎன மலையாநின்றார் - இருமலைகள் போரிடுவது போல் போரிட்டார்கள்; கண்டதேவர் - அச்செயலைக்கண்ட தேவர்கள்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் - தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர். | கும்பன் - கும்பகருணன் மக்கள் இருவரில் ஒருவன், மற்றொருவன் நிகும்பன். அரங்கு - போர்க்களம், சாரிபோதல் - இடவலமாகத்திரிதல். | (236) |
|
|
|