1319.உற்றது கொண்டு, மேலவந்து
     உறுபொருள் உணரும் கோளார் ; 
மற்றுஅது வினையின் வந்தது
     ஆயினும், மாற்றல் ஆற்றும்
பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப்
     பெரியவர் ; அரிய நூலும்
கற்றவர் ; மானம் நோக்கின்,
     கவரிமா அனைய நீரார்.

     உற்றது கொண்டு - நடந்ததைக் கொண்டு ;  மேல்வந்து உறு
பொருள் -
எதிர்காலத்து வந்து நேரத் தக்கவற்றை; உணரும் கோளார்-
கணித்து அறியும் அறிவு வன்மையுடையவர்கள் ; அது வினையின் வந்தது
ஆயினும்
-அந்த வேண்டாத கேடு ஊழ்வினையினால் ஒருகால் வந்தாலும்;
மாற்றல் ஆற்றும்பெற்றியர் - அதனை மாற்றவல்ல முயற்சித்திறம்
உடையவர்கள்; பிறப்பின்மேன்மைப் பெரியவர் - நற்குடிப் பிறப்பினால்
வந்த சிறப்பினையுடைய பெரியவர்கள் ; அரிய நூலும் கற்றவர் - கற்றற்கு
அரிய நுண்ணிய நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள்; மானம் நோக்கின்-
மானத்தை நோக்குமிடத்தில் ;  கவரிமா அனைய நீரார்- கவரிமானைப்
போன்ற தன்மையுடையவர்கள்.

     இதனால் அமைச்சர்களின் முன்னறிவும் திறனும், தளராது முயலும்
திட்பமும்,குடிப்பிறப்பும், கல்விச் சிறப்பும், மானமுடைமையும் கூறப்பட்டன.
மானம் - எந்நாளும்தன்னிலையில் தாழாமையும், ஊழால் தாழ்வு வந்துழி
உயிர் வாழாமையும் ஆம். கவரிமான், இமயமலைபோலும் குளிர் மிகுந்த
மலைப்பகுதிகளில் வாழும் ஒருவகை மான். அந்த மானின் உடலிலிருந்து
மயிர் உதிர்ந்தால், அது குளிர் தாங்காது மாண்டுபோகும். அதுபோலத் தம்
புகழுக்கு இழுக்கு நேரும்காலம் வந்துழி உயிர் வாழார் ;  அழிவர்
என்பதாம்.

     மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
     யாவுள முன்நிற் பவை

     மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
     உயிர்நீப்பர் மானம் வரின்

என்னும் குறட்பாக்களை (636, 969) ஒப்பு நோக்கலாம்.                 6