1321.தம்உயிர்க்கு இறுதி எண்ணார் ; 
     தலைமகன் வெகுண்ட போதும்,
வெம்மையைத் தாங்கி, நீதி
     விடாதுநின்று, உரைக்கும் வீரர் ; 
செம்மையின் திறம்பல் செல்லாத்
     தேற்றத்தார் ; தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ; 
     ஒருமையே மொழியும் நீரார்.

     தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட
காலத்திலும் ; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால்
தம் உயிர்க்கு அழிவு விளையும்என்றுகூட நினையாதவராய் ; 
வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை
ஏற்றுக்கொண்டு ;  விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை
விட்டுவிடாமல்உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு
மிக்கவர்கள் ;  செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் -
நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாததெளிவுடையவர்கள் ;  தெரியும்
மும்மைக் காலமும்
- அறியத்தக்க முக்காலநிகழ்வுகளையும் ;  உணர
வல்லார்
- உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள் ; ஒருமையே
மொழியும் நீரார்
- உண்மையையே பேசும் இயல்பினையுடையவர்கள்.

     இறுதி - அழிவு ; ஆபத்து எண்ணார் - முற்றெச்சம். தாம் கொண்ட
முடிவில் ஊற்றமாய் நின்று எதிர்ப்புகளை வீழ்த்தி மேம்படுதலால் வீரர்
என்று புகழப்பெற்றனர்என்க. காலம் நிகழ்ச்சியைச் சுட்டிற்று. ஒன்றல்லது
இரண்டன்மையின் ஒருமை என்பது உண்மையைச்சுட்டியது. ஒருமையே
மொழியும் நீரார் என்பதற்கு முன்னுக்குப்பின் மாறுபட்டுப் பேசாமல்
ஒருபடியாகப் பேசுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். அமைச்சர்
பலராயினும் ஒருமிடராய்க் கருத்துரைப்பர்என்பதாம்.                 8