1324. | முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல் அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது, இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல் துறை அறி பெருமையான் அருளும் சூடினார். |
முறைமையின் எய்தினர் - அவ் அமைச்சர்கள் அரசவைக்குச் செல்லுதற்குரிய முறைப்படியே அணுகி ; முந்தி அந்தம் இல் அறிவனை வணங்கி -முதலில் முடிவில்லாத அறிவினையுடைய வசிட்ட முனிவனைப் பணிந்து ; தம் அரசைக்கைதொழுது - பின்னர்த் தம் அரசனாகிய தசரதனைக் கைகூப்பிக் கும்பிட்டு ; இறையிடை வரன்முறை ஏறி - தம் இருக்கைகளில் வரிசைக்கேற்ப ஏறி ; ஏற்ற சொல்துறை அறி பெருமையான் - சூழ்நிலைக்குத் தக்கவாறு பேசும் முறைமை அறிந்த பெருமைக்குரியமன்னன் ; அருளும் சூடினார் - அருட்பார்வையையும் பெற்றார்கள். அந்தம் இல் அறிவன் - பேரறிவு நிறைந்தவன் ; பிரம ஞானம் வாய்க்கப் பெற்றவன். வணங்குதல் - குனிந்து நிலம் தொட்டுப் பணிதல் ; தண்டன்சமர்ப்பித்தல். கைதொழுதல் - நின்றவாறே கைகூப்பிப் பணிதல். இறை - தவிசு. 11 |