1338. | ‘கச்சை அம் கடக் கரிக் கழுத்தின்கண் உறப் பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் நிச்சயம் அன்றுஎனின், நெடிது நாள் உண்ட எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ? |
கச்சை அம் கடக்கரி - கயிறு பூண்ட அழகிய மத யானையினது ; கழுத்தின்கண் உற - கழுத்தில் பொருந்த ; பிச்சமும் கவிகையும் பெய்யும்- பீலிக் குஞ்சமும் வெண் கொற்றக் குடையும் தருகின்ற ; இன் நிழல் - இனியநிழலின்கண் இருந்து ஆளும் வாழ்வு ; நிச்சயம் அன்று எனின் - என்றும் நிலைக்கக்கூடியதன்று என்றால் ; நெடிது நாள் உண்ட எச்சிலை - நெடுங்காலமாக நுகர்ந்துவந்தஎச்சில் போன்ற அதனை ; நுகருவது - மேலும் துய்ப்பது ; இன்பம் ஆகுமோ- இன்பம் தருவதாகுமோ? (ஆகாது).’ நிலையாத அரச இன்பத்தை விடுத்து நிலைத்த இன்பம் நல்கும் துறவினைநாடுவது சிறப்பு என்பது கருத்து. “ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ” (திருவாய்மொழி, 4:1:1) |
என்பர் நம்மாழ்வார். பிச்சமும் கவிகையும் அரச சின்னங்கள். நிழல் - ஈண்டுக் குடைநிழலில் இருந்து ஆளும் அரச போகத்தைக் குறித்தது. 25 |