1345.அன்னர் ஆயினும், அரசனுக்கு, அது அலது உறுதி
பின்னர் இல் எனக் கருதியும், பெரு நில வரைப்பில்
மன்னும் மன்னுயிர்க்கு இராமனின் மன்னவர் இல்லை
என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார்.

     அன்னர் ஆயினும் - (மந்திரக் கிழவர்) அத்தன்மையராயினும் ;
அரசனுக்கு - தயரதனுக்கு ;  அது அலது உறுதி பின்னர் இல் எனக்
கருதியும்
-அவ்வாறு செய்வதன்றி நன்மை வேறில்லை என்று எண்ணியும்;
பெரு நில வரைப்பில் - பெரிய நிலவுலகத்தில்; மன்னும் மன்னுயிர்க்கு-
தங்கியிருக்கின்றநிலைபேறுடைய உயிர்களுக்கு ;  இராமனின் மன்னவர்
இல்லை
- இராமனைப் போலச்சிறந்த அரசர் இல்லை ;  என்ன
உன்னியும்
- என்று நினைத்தும் ;  விதியது வலியினும் - விதியின்
வலிமையாலும்; இயைந்தார் - (அரசன் கருத்துக்கு)உடன்பட்டனர்.

     தயரதன் விருப்பத்தினை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதற்கு மூன்று
காரணங்கள் இருந்தன. அவை :  துறவு தயரதனுக்கு நன்மை தரும் என்று
எண்ணியமை, இராமனைப்போன்ற சிறந்த அரசர் இல்லை என்று
நினைத்தமை, இராமன் காடு செல்வதற்குரிய விதியின் வலிமைஎன்பன.  32