வசிட்டன் பேச்சு 1346. | இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும், மகன்பால் பரிந்த சிந்தை அம் மன்னவன் கருதிய பயனும், பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும், பொதுவுற நோக்கி, தெரிந்து, நான்மறைத் திசைமுகன் திருமகன் செப்பும் : |
நான்முறைத் திசைமுகன் திருமகன் - நான்கு வேதங்களையுடைய நான்முகனுக்கு மகனாகிய வசிட்டன் ; இருந்த மந்திரக் கிழவர்தம் எண்ணமும் - அங்குக் கூடியிருந்த அமைச்சர்களின் கருத்தையும் ; மகன்பால் பரிந்த சிந்தை - மகன்மீது அன்புகொண்ட ; அம் மன்னவன் கருதிய பயனும் - அந்தத் தயரதன் நினைத்த நினைப்பையும் ; மன் உயிர்க்குப்பொருந்தும் உறுதியும் - அவற்றால் நிலைபெற்ற உயிர்களுக்கு உண்டாகும் நன்மையையும் ; பொது உற நோக்கி - நடுவு நிலைமை பொருந்த ஆராய்ந்து ; செப்பும் -பின்வருமாறு சொல்வபவனானான். பொதுவுற நோக்கல் - விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கல். வசிட்டன் பிரமதேவனுக்கு மானச புத்திரனாதலின் அவனைத் ‘திசைமுகன் மகன்’ என்றார். 33 |