1349. | ‘புறத்து, நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ, அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்? பிறத்து, யாவையும் காத்து, அவை பின் உறத் துடைக்கும் திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும், அத் திறலோன். |
‘அறத்தின் மூர்த்தி - அறத்தின் வடிவமான பரம்பொருளே! வந்து- தன் திருவுள்ளத்தால் இவ்வுலகிற்கு வந்து ; அவதரித்தான் என்பது அல்லால் - இராமனாகப் பிறந்துள்ளான் என்பதையன்றி ; புறத்து - அதனின் வேறாக ; நாம் புகல்கின்றது ஒருபொருள் எவன் - இனி நாம் உரைக்கத்தக்கது யாது?; அத் திறலோன்- அந்த ஆற்றல் மிக்க இராமன்; யாவையும் - எல்லாப் பொருள்களையும் ; பிறத்து - தோற்றுவித்து ; காத்து - காப்பாற்றி ; பின்அவை உறத் துடைக்கும் திறத்து - இறுதியில் அவற்றை முற்றும் அழிக்கும் திறனுள்ள ; மூவரும் - பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் செயல்களும் ; திருந்திடத் திருத்தும் - திருத்தமடையத் திருத்துவான்.’ மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளே இராமனாகத் தோன்றியுள்ளான் என்பது கூறப்பட்டது. பிறத்து - பிறந்து என்பதன் பிறவினை. 36 |