1349. ‘புறத்து, நாம் ஒரு பொருள் இனிப்
     புகல்கின்றது எவனோ,
அறத்தின் மூர்த்தி வந்து
     அவதரித்தான் என்பது அல்லால்?
பிறத்து, யாவையும் காத்து, அவை
     பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத்
     திருத்தும், அத் திறலோன்.

     ‘அறத்தின் மூர்த்தி - அறத்தின் வடிவமான பரம்பொருளே! வந்து-
தன் திருவுள்ளத்தால் இவ்வுலகிற்கு வந்து ; அவதரித்தான் என்பது
அல்லால்
- இராமனாகப் பிறந்துள்ளான் என்பதையன்றி ; புறத்து -
அதனின் வேறாக ;  நாம் புகல்கின்றது ஒருபொருள் எவன் - இனி நாம்
உரைக்கத்தக்கது யாது?; அத் திறலோன்- அந்த ஆற்றல் மிக்க இராமன்;
யாவையும் - எல்லாப் பொருள்களையும் ; பிறத்து - தோற்றுவித்து ;
காத்து - காப்பாற்றி ;  பின்அவை உறத் துடைக்கும் திறத்து -
இறுதியில் அவற்றை முற்றும் அழிக்கும் திறனுள்ள ; மூவரும் - பிரமன்,
திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் செயல்களும் ; திருந்திடத்
திருத்தும்
- திருத்தமடையத் திருத்துவான்.’

     மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளே இராமனாகத்
தோன்றியுள்ளான் என்பது கூறப்பட்டது. பிறத்து - பிறந்து என்பதன்
பிறவினை.                                                   36