1355. | அனையது ஆகிய உவகையன், கண்கள் நீர் அரும்ப, முனிவன் மா மலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி, ‘இனிய சொல்லினை ; எம்பெருமான் அருள் அன்றோ, தனியன் நானிலம் தாங்கியது? அவற்கு இது தகாதோ? |
அனையது ஆகிய உவகையன் - அத்தன்மைத்தாகிய மகிழ்ச்சி யடைந்த தயரதன் ; கண்கள் நீர் அரும்ப - அம் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக்கண்களில் நீர் துளிர்க்க ; முனிவன் மாமலர்ப் பாதங்கள் - வசிட்ட முனிவனுடையசிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை ; முறைமையின் இறைஞ்சி -வணங்குதற்குரிய முறைப்படி வணங்கி ; ‘இனிய சொல்லினை - செவிக்கும்சிந்தைக்கும் இனிய கருத்தினைத் தெரிவித்தாய் ; தனியன் நானிலம் தாங்கியது - தனியொருவனாக யான் மண்ணுலகினைப் போற்றிக் காத்தது; எம்பெருமான் அருள்அன்றோ - என் இறைவனாகிய நினது அருளால் அல்லவா? அவற்கு இது தகாதோ- அந்தஇராமனுக்கு இவ்வாறு அரசுபுரிதல் தகுதியுடையதாகாதோ? (ஆகும்).’ 42 |