ராமனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்  

1360.என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன்,
‘நன்று சொல்லினை ; நம்பியை நளி முடி சூட்டி-
நின்று, நின்றது செய்வது ; விரைவினில், நீயே
சென்று, கொண்டு அணை, திருமகள் கொழுநனை’
                                    என்றான்.

     என்றவாசகம் - இவ்வாறான சொற்களை; சுமந்திரன்இயம்பலும்-
சுமந்திரன் மென்மையாகத் தெரிவித்தவுடன் ;  இறைவன் - அரசனாகிய
தயரதன் ;  ‘நன்று சொல்லினை - நல்லதையே சொன்னாய் ; நம்பியை
நளிமுடி சூட்டிநின்று
- குணங்களால் நிறைந்தவனான இராமனுக்குப்
பெருமை பொருந்தியமகுடத்தை அணிவித்து ;  நின்றது செய்வது-
மேலே செய்ய நின்றதைச்செய்வோமாக ;  நீயே விரைவினில் சென்று-
நீயே விரைவாகப் போய் ; திருமகன் கொழுநனை
-திருமகளைப்போலும்
சீதைக்குக் கணவனான இராமனை ;  கொண்டு அணை’ என்றான் -
அழைத்துக்கொண்டு வருவாய்’ என்றான்.

      நளி - பெருமை ;  மனு முதற்கொண்டு சூடிய சிறப்பு. நின்றது -
எஞ்சி நின்றது ;  ஈண்டுத் தவஞ்செய்தல். செய்வது - வியங்கோள்
வினைமுற்று.                                                 47