தேரில் சென்ற இராமனைக் கண்ட பெண்டிர் செயல்  

1364.முறையின் மொய்ம் முகில் என
     முரசு ஆர்த்திட, மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட,
     இமையவர், ‘எங்கள்
குறை முடிந்தது’ என்று ஆர்த்திட,
     குஞ்சியைச் சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட,
     தேர்மிசை நடந்தான்.

     முரசு - பேரிகைகள் ;  முறையின் - வரிசையாக ; மொய்ம்முகில்
என ஆர்த்திட
- ஒன்றுசேர்ந்த மேகம் போல முழங்கவும் ;  மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட
- மடப்பம் பொருந்திய பெண்களினுடைய
முன்னங்கையினின்று கழன்று விழுந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும் ;
இமையவர் -தேவர்கள் ;  எங்கள் குறை முடிந்தது என்று ஆர்த்திட-
எங்கள் வருத்தம்தீர்ந்தது என்று ஆரவாரிக்கவும் ;  குஞ்சியைச் சூழ்ந்த-
தன் திருமுடியில்சுற்றியிருந்த; நறை அலங்கல் வண்டு - தேன் சொரியும்
கண்ணிகளில் மொய்த்தவண்டுகள் ; ஆர்த்திட - ஒலிக்கவும் ; தேர்மிசை
நடந்தான்
-தேரில் சென்றான்.

     இறை - முன்கை ;  சங்கு - வளை; சங்கினால் செய்யப்பட்டமையின்
இப் பெயர் பெற்றது. மடவார் என்பது மடப்பம் பொருந்திய பெண்களைக்
குறித்தது.                                                    51