1366. | நீள் எழுத் தொடர் வாயிலில், குழையொடு நெகிழ்ந்த ஆளகத்தினோடு அரமியத் தலத்தினும் அலர்ந்த ; வாள் அரத்த வேல் வண்டொடு கெண்டைகள் மயங்க, சாளரத்தினும் பூத்தன. தாமரை மலர்கள். |
நீள் எழுத் தொடர் வாயிலில் - நீண்ட தூண்கள் அமைந்த மாளிகைவாயில்களிலும் ; அரமியத் தலத்தினும் - அவற்றின் நிலா முற்றங்களிலும் ; குழையொடு - குண்டலங்களொடும் ; நெகிழ்ந்த ஆளகத்தினோடு - அவிழ்ந்தகூந்தலொடும் ; தாமரை மலர்கள் - பெண்களின் முகங்களாகிய தாமரை மலர்கள் ; அலர்ந்தன - மலர்ந்தன ; சாளரத்தினும் - அவை அம் மாளிகைகளின்பலகணிகளிலும் ; வாள் அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்க - வாளொடும்குருதி தோய்ந்த வேலொடும் வண்டுகளொடும் கெண்டைகள் கலந்து நிற்க ; பூத்தன -மலர்ந்தன. வீதியில் வந்த பெண்களே யன்றி, வேறு சிலர் மாளிகை வாயில்களிலும் நிலா முற்றங்களிலும் இருந்து இராமனைக் கண்டனர் என்பது கருத்து. புருவம் வாளாகவும், செவ்வரிபடர்ந்த கண் குருதி படிந்த வேலாகவும், கருவிழி வண்டாகவும், புடைபெயரும் கண்கள் கெண்டையாகவும்கூறப்பட்டன. ஆளகம் - அளகம் என்பதன் நீட்டல் விகாரம் ; அளகம் - கூந்தல். 53 |