1367. | மண்டலம் தரு மதி கெழு, மழை முகில் அனைய, அண்டர் நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல், தொண்டை வாய்ச்சியர் நிறையொடும், நாணொடும், தொடர்ந்த கெண்டையும் உள ; கிளை பயில் வண்டொடும் கிடந்த. |
மண்டலம் தரு மதி கெழு - வட்ட வடிவமாகிய சந்திரன் போலும் முகம் அமைந்த ; மழை முகில் அனைய - கரிய மேகத்தைப் போன்ற ; அண்டர் நாயகன் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானது ; வரைபுரை அகலத்துள்அலங்கல் - மலையை நிகர்த்த மார்பில் உள்ள மாலையில் ; தொண்டைவாய்ச்சியர் - கொவ்வைக் கனி போன்ற சிவந்த இதழ்களைக் கொண்ட மகளிரின்; நிறையொடுங் நாணொடும் தொடர்ந்த- மனவடக்கமும் நாணமும் ஆகிய பண்புகள் முன்னேபோகப் பின்னே தொடர்ந்த; கெண்டையும் உள - விழிகளாகிய கெண்டைகளும்உள்ளன; கிளை பயில் வண்டொடும் கிடந்த - அவை அந்த மாலையில் முன்னரே தேனைநாடிவந்து உள்ளனவாகிய கிளை என்னும் இசையைப் பழகிய வண்டுகளோடு தங்கின. மண்டலம் தருமதி என்பது முழுமதியைக் குறித்தது. ஈண்டு மதி ஆகுபெயராய். அதுபோலும் இராமபிரானது முகத்தைச் சுட்டியது. இராமபிரான் திருமுகத்துக்குச் சந்திரனும்,திருமேனிக்கு மழைமுகிலும் ஒப்பு. கிளை - கைக்கிளை என்னும் பண். 54 |