1372. ‘நலம் கொள் மைந்தனைத் தழுவினன்’
     என்பது என்? நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை
     நிலையிட நினைந்தான்,
விலங்கல் அன்ன திண் தோளையும்,
     மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு,
     கொண்டு அளந்தான்.

     நலம்கொள்மைந்தனை - நன்மைகள் அனைத்தையும் கொண்ட
தன்மகனாகிய இராமனை ;  தழுவினன் என்பது என் -தந்தையாகிய
தயரதன்அணைத்துக்கொண்டான் என்று சொல்வது எதன்பொருட்டு? ;
நளிநீர்நிலங்கள் - பெரிய நீரையுடைய கடலால் சூழப்பட்டமண்ணுலகை ;
தாங்குறு நிலையினை - போற்றிக் காத்தற்குரியஇராமனுடைய நிலையை ;
நிலையிட நினைந்தான் - அளந்து பார்க்கக்கருதி ;  விலங்கல் அன்ன
திண்தோளையும்
- இராமனுடைய மலைபோன்ற திண்மை வாய்ந்த
தோள்களையும் ;  மெய்த்திரு இருக்கும் அலங்கல் மார்பையும்-
உண்மையான திருமகள் உறையும் மாலையணிந்தமார்பையும் ;  தனது
தோள் மார்பு கொண்டு
- தன்னுடைய தோள்களையும் மார்பையும்
கொண்டு ;  அளந்தான் - அளவிட்டான்.

     தயரதன் இராமனைத் தழுவியதற்குக் காப்பிய ஆசிரியர் ஒரு காரணம்
கற்பித்துக் கூறலின் இது தற்குறிப்பேற்ற அணி. நினைந்தான் - முற்றெச்சம்.
மன்னன் மார்பில்திருமகள் உறைவதாகச் சொல்வது மரபு. இராமன்
திருமாலே ஆதலின் அவன் மார்பில் உறைபவளை‘மெய்த்திரு’ என்றார். 59