தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனைக்குப் போதல்

1383.குருசில் சிந்தையை மனக்கொண்ட
     கொற்ற வெண்குடையான்,
‘தருதி இவ் வரம்’ எனச் சொலி,.
    உயிர் உறத் தழுவி,
சுருதி அன்ன தன் மந்திரச்
    சுற்றமும் சுற்ற,
பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில்
    போய்ப் புக்கான்.

     குருசில் சிந்தையை - இராமனது மனக் கருத்தை;  மனம் கொண்ட
கொற்ற வெண்குடையான்
- உட்கொண்ட வெற்றி பொருந்திய
வெண்குடையை யுடையவனாகிய தயரதன்;  ‘இவ் வரம் தருதி -இந்த
வரத்தைத் தருவாய்;’ எனச் சொலி - என்று சொல்லி; உயிர் உறத்தழுவி-
அவனைத் தன் உயிரோடு பொருந்தும்படி  இறுக அணைத்துக் கொண்டு;
சுருதி அன்ன - வேதத்தையொத்த; தன் மந்திரச் சுற்றமும் சுற்ற -
தன்னுடைய அமைச்சர்களின் கூட்டமும் தன்னைக்சூழ்ந்துவர;  பொரு இல்
மேருவும்
- ஒப்பு அற்ற மேரு மலையும்;  பொரு அருங் கோயில்-
ஒப்பாவதற்கு அரிய தன் அரண்மனையில்;  போய்ப் புக்கான் - போய்ச்
சேர்ந்தான்.

     நன்மை தீமைகளை ஆராய்ந்து  அரசனுக்குச் சொல்லி  நீதி வழி
நிறுத்துதல்  பற்றி அமைச்சர்களுக்குச்சுருதியை உவமையாகக் கூறினார்.
மேருவும் - உம்மை.  உயர்வு சிறப்பு.                            70