இராமன் தன் அரண்மனை சேர்தல்

1384.நிவந்த அந்தணர்,
     நெடுந் தகை மன்னவர், நகரத்து
உவந்த மைந்தர்கள்,
    மடந்தையர், உழைஉழை தொடர,
சுமந்திரன் தடந் தேர்மிசை,
     சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனம், தன் நெடுங்
     கோயில் சென்று அடைந்தான்.

     நிவந்த அந்தணர்- உயர்ந்த வேதியரும்;  நெடுந்தகைமன்னர் -
பெருந்தன்மை பொருந்தியஅரசர்களும்;  நகரத்து உவந்த மைந்தர்கள் -
அயோத்தி நகரத்தில்வாழும் தன்னைக் காணுதலில் பெருமகிழ்ச்சி யடையும்
இளைஞர்களும்;  மடந்தையர் - பெண்களும்;உழை உழை தொடர -
பக்கங்களிலே சூழ்ந்துவர;  சுந்தரத் திரள்தோள்அமைந்த மைந்தனும் -
அழகிய திரண்ட தோள்களையுடையஇராமனும்; தன் நெடுங் கோயில் -
தனது பெரிய மாளிகையை; சென்று அடைந்தான்- போய்ச் சேர்ந்தான்.

     நிவப்பு - உயர்வு குலம், அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தோர்
அந்தனர் ஆவர்.  தாடகையைக்கொன்று, சிவன் வில்லை முறித்து,
பரசுராமன் செருக்கினை அழித்ததோடு கட்டழகும் நிறைந்திருப்பவையாதலின்
இராமன் தோள்கள்  ‘சுந்தரத் திரள் தோள்’ என்று சிறப்பிக்கப்பட்டன. 
மைந்தனும் - உம்மை இறந்தது  தழுவியது; தந்தை போனபின் தனயனும்
சேர்ந்தான் என்பதை உணர்த்தியது.                               71