தயரதன் வினாவும் வேத்தவையின் விடையும் 1390. | வேறு இலா மன்னரும் விரும்பி, இன்னது கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன், ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான். மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான். |
வேறு இலா மன்னரும் விரும்பி - கருத்து மாறுபாடில்லாத மன்னரும் இராமன் முடிசூடுதலை விரும்பி; இன்னது கூறினார் - இவ்வாறு கூறினர்; அது மனம் கொண்ட கொற்றவன் -அதனைக் கருத்தில் கொண்ட தயரதன்; ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் - தன்னுள்ளேசுரந்த மகிழ்ச்சியை வெளிப்படாது மறைக்கும் கருத்தினனாய்; மாறும் ஓர் - பிறிதொரு;அளவை சால்வாய்மை கூறினான் - (அவர்கள் மனத்தை) அளத்தற்குரிய ஒரு வாய்ச்சொல்லைச்சொன்னான். வேறிலா மன்னர் - கருத்தொருமித்த மன்னர்கள். வாய்மை - வாய்ச்சொல். அளவை சால்வாய்மை - அளந்தறியும் சொல். 77 |