1391. | ‘மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம், உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ? தகவு என நினைந்தது எத் தன்மையால்?’ என்றான். |
‘மகன்வயின் அன்பினால் மயங்கி - (தயரதன் அரசர்களை நோக்கி) என்மகன்மீது கொண்ட பாசத்தினால் அறிவு மயங்கி; யான் இது புகல - நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்க; நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் - (அதற்கு இணங்கி) நீங்கள் சொன்ன இந்தப்பொலிவு பெற்ற வார்த்தை; உகவையின் மொழிந்ததோ - மன மகிழ்ச்சியினால் புகன்றதோ?;தகவு என நினைந்தது - தகுதி என்று கருதியது; எத் தன்மையால் என்றான் - எவ்வகையினால்’ என்று வினவினான். உகவை - மகழ்ச்சி; உகவையான் நெஞ்சம் உள்ளுருகி என்பது நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழி6.2.9). 78 |