1433. | ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்; வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர் போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்; தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.* |
(நகர மக்கள்) ஆர்த்தனர் - ஆரவாரித்தனர்; களித்தனர் - மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர் -; வேர்த்தனர் - உடல் வியர்க்கப் பெற்றனர்; தடித்தனர் -(மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்; மெய் - உடம்பில்; மயிர் சிலிர்த்துப்போர்த்தனர் - மயிர்க்கூச்செறியப் பெற்று மூடப் பெற்றனர்; மன்னனை - தயரதனை; புகழ்ந்து - துதித்து; வாழ்த்தினர் -; சொல்லினார்க்கு எலாம் - இந் நற்செய்தியைச் சொன்னவர்களுக்கொல்லாம்; நீள்நிதி - பெருஞ்செல்வத்தை; தூர்த்தனர்- நிரப்பினார்கள். எல்லாம் என்பது இருதிணைப் பொது. மகிழ்ச்சி மிகுதியால் புளகாங்கிதம் அடைதல் என்பதனையே‘மெய்ம்மயிர்ச் சிலிர்த்துப் போர்த்தனர்’ என்றார். 35 |