கைகேயியின் மறு மாற்றம் 1452. | வெவ் விடம் அனையவள் விளம்ப, வேற்கணான், ‘தெவ் அடு சிலைக் கை என் சிறுவர் செவ்வியர்; அவ் அவர் துறைகொறும் அறம் திறம்பலர்; எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?’ எனா, |
வெவ்விடம் அனையவள் - கொடிய நஞ்சையொத்த கூனி; விளம்ப- இவ்வாறுசொல்ல; வேற்கணாள் - வேலையொத்த கண்ணையுடைய கைகேயி; ‘தெவ் அடு சிலைக் கைஎன் சிறுவர் - பகைவரை அழிக்கும் வில்லைப் பிடித்த கைகை உடைய என் புதல்வர்; செல்வியர்- நலமாய் இருக்கின்றனர்; அவ் அவர் துறை தொறும் - அவரவர்களுடைய தொழில்களில் எல்லாம்;அறம் திறம்பவர் - தருமத்திலிருந்து மாறுபடாதவர்கள்; (எனவே) ஈண்டு - இப்பொழுது; எனக்கு; வந்து அடுப்பது - வந்து நேர்வது;எவ் இடர்? - என்ன துன்பம்; எனா - என்று சொல்லி; (அடுத்த பாட்டில் முடியும்) பிறரால் தீங்கு வராது காக்கவல்லவர் ஆதலின் “தெவ்வடு சிலைக்கை” யுடையவர்; தாம் தீங்குநெறிகளிற் செல்லாதவர் ஆதலின் ‘அறம் திறம்பலர்;’ அதுவே துன்பம் எப்படி வரும், என்ன துன்பம் வரும் என்றாள் கைகேயி. சிறுவர் என்பது நால்வரையும் குறித்தது. 54 |