மாலையை எறிந்து, மந்தரை கூறுதல் 1459. | தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்; அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே. |
கொடிய அக் கூனி - கொடுமை படைத்த அந்தக் கூனி; தெழித்தனள் - சப்தமிட்டாள்;உரப்பினள் - அதட்டினாள்; சிறுகண் தீ உக விழித்தனள் - சிறிய கண்களிலிருந்து நெருப்புப் பொறி சிந்த விழித்துப் பார்த்தாள்; வைதனள் - திட்டினாள்; வெய்து உயிர்த்தனள் - வெப்பமாக மூச்சு விட்டாள்; அழித்தனள் - (தன்கோலத்தைக்) கெடுத்துக்கொண்டாள்; அழுதனள் - ; அம்பொன் மாலையால் - (கைகேயி அளித்த) அழகிய பொன் மாலையினால்; நிலத்தை - பூமியை; குழித்தனள் - குழியாக்கினாள். கூனியின் கொடுமை - பெயரிலும், உடலிலும், சொல்லிலும், செயலிலும், குணத்திலும் உள்ளது.குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டாகச் செய்த செயலை வஞ்சம் வைத்துக்கொண்டு பழிதீர்க்கநினைத்தாள். ஆதலின் கொடியள் ஆயினாள். பொன்மாலையை நிலத்தில் எறிந்தாள்; அது தாக்கி நிலம்பள்ளம் ஆயிற்று. ‘ஏ’ ஈற்றசை. 61 |