1462.‘மறந்திலள் கோசலை, உறுதி; மைந்தனும்,
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்,
இறந்திலன் இருந்தனன்; என் செய்து ஆற்றுவான்?
பிறந்திலன் பரதன், நீ பெற்றதால்’ என்றாள்.

     ‘கோசலை உறுதி மறந்திலள் - கோசலை (தனக்குரிய) நன்மையை
மறந்தாளில்லை; (அதனால்)மைந்தனும் - இராமனும்; சிறந்த - மேம்பட்ட;
நல் - நல்ல; திருவினில்திருவும் - செல்வங்களுக்கெல்லாம் மேம்பட்ட
அரசச் செல்வத்தையும்; எய்தினான் -அடைந்தான்; நீ பெற்றதால் - நீ
பிள்ளையாகப் பெற்றதால்; பரதன் -; இறந்திலன்- செத்தானில்லை; 
என்செய்து ஆற்றுவான் இருந்தனன் - என்ன காரியம் செய்து
முடிப்பதற்காக இருந்துகொண்டுள்ளான்; பிறந்திலன் - ‘பிறந்தும்
பிறவாதவனே;’ என்றாள்- என்று கூறினாள்.

     அரசேற்று முடிசூடல் ஆகிய செயல் இராமனுக்கு உண்டானாற்போலப்
பரதன் என் செயவாழ்கின்றான்; அவன் இருந்தும் இறந்தவனே என்றான்
கூனி. இதுவும் பரதனுக்கு வருகின்ற இழப்பைக்காட்டி புலம்பி, கைகேயியின்
மனத்தைத் திரிக்க முயன்றதாம். திருவினில் திரு - அரசச்செல்வம்; எல்லாச்
செல்வங்களிலும் மேம்பட்டது.                                    64