1476. | ‘அறன் நிரம்பிய அருளுடை அருந் தவர்க்கேனும், பெறல் அருந் திருப் பெற்றபின், சிந்தனை பிறிது ஆம்; மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும், மனத்தால் இறல் உறும்படி இயற்றுவர், இடையறா இன்னல். |
‘அறன் நிரம்பிய - அறவாழ்வுக்குரிய நற்குணங்களால் நிறைந்த; அருளுடை -கருணையுடைய; அருந்தவர்க்கேனும் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்த முனிவர்களுக்கும்;பெறல் அருந்திருப் பெற்ற பின் - பெறுதற்கு அரிய செல்வத்தைப் பெற்ற பிறகு; சிந்தனைபிறிது ஆம் - எண்ணம் வேறுபடும்; (ஆதலால் இராமன் கோசலை முதலோர் அரச பதவி பெற்றபிறகு) உமை - உங்களை; மறம் நினைந்து - கொல்லுதல் கருதி; வலிகிலர்ஆயினும் - துன்புறுத்தாமல் விட்டாலும்; இறல் உறும்படி - (நீங்களாகவே)சாகும்படி; மனத்தால் இடையறா இன்னல் இயற்றுவர் - மனத்தால் கருதி இடையறாத துன்பத்தைச்செய்வார்கள். கோசலை முதலியோர் இன்றைக்கு உங்களிடும் நட்பாக இருப்பதுபோல் அரசபதவி பெற்றபிறகும்இருப்பார்கள் என்று கருதாதே, கருவியால் நேரே கொல்லாவிடினும், மனத்தால் துன்பத்தைச் செய்வர்; அது பொறாமல் நீங்களாகவே இறந்தபடுவீர்கள். செல்வம் பெற்றபின் சிந்தை வேறாவது முனிவர்க்கும் உள்ளது என்றால், சாமானியர்களாய இவர்கள் அதற்கு எம்மாத்திரம்? - என்பது கூனியின் வாதம், “என் சிறுவர் அறந் திறம்பலர்” “இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ” (1452, 1453) என்று கைகேயி கூறியதை அனுசரித்து, ‘இப்போது அப்படி நீ நினைக்கலாம், அரசன் ஆன பிறகு எப்படியோ’ என்றுமறுத்து தன் கருத்தை வலியுறுத்தினாள். முன்னிரண்டு வரிகளின் செய்தியைப் பின்னிரண்டு வரிகள்பாதுகாத்து நிற்கின்றன. 78 |