1492. விளையும் தன் புகழ் வல்லியை
     வேர் அறுத்தென்ன,
கிளை கொள் மேகலை சிந்தினள்;
     கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்
     துடைப்பாள்போல்,
அளக வாள் நுதல் அரும் பெறல்
     திலகமும் அழித்தாள்.

     விளையும்தன் புகழ் வல்லியை - வளரும் தன்புகழாகிய கொடியை;
வேர் அறுத்துஎன்ன - வேரொடு அறுத்தாற் போல; கிளை கொள்
மேகலை
- ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை;சிந்தினாள்-
அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளைதுறந்தனள் - பாதக்
கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்;  மதியினில்
மறு -
சந்திரனிடத்தில்இருக்கும் களங்கத்தை;  துடைப்பாள்
போல-
அகற்றுபவளைப் போல;  அளக வாள் நுதல் -கூந்தலைச் சார்ந்து
அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள;  பெறல்அரும்
திலகமும்
-  பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்-துடைத்தாள்.

     மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது  போலும்
எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது  மதியின் மறுவைத் துடைத்தது
போலும் எனவும்  கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை
நோக்கி ‘அரும் பெறல்’  என்னும் அடை மொழி தந்தார்.  அறுத்தென்ன -
தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என
ஒலித்தலான்.                                                  2