1508.மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.

     ஆவிபதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண்எய்துகின்றான்-
பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்;  நிலத்தில்மேவி இருக்கும் -
தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும்- எழுந்து நிற்பான்;
வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம்ஒப்ப - சித்திரம்
போல; 
உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கிஒய்வான்;  பாவியை
எதிர் உற்றுப்பற்றி -
கைகேயியை எதிரே சென்று பிடித்து;  எற்ற-
மோத;  எண்ணும் - நினைப்பான்.

     இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது
இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின்கைகேயி பாவி என்று
குறிக்கப்பட்டாள்.                                              18