தயரதன் துயர் கொள்ள, கைகேயி துயிர் கொள்ளல் 1539. | கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின் ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க, தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி, ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள். |
கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று, கூறி முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற; கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க; வன் துயர் ஆகத்து இடை மூழ்க - கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி - உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்; செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற சிந்தையினாளும் - மகிழ்ச்சி ஊறுகின்ற மனமுடையகைகேயியும்; துயிலுற்றாள் - உறங்கினாள். இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும் மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள் ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல, செயல் முற்றலாவது - தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது. 49 |