யானைகள் துயில் ஒழிந்து எழுதல் 1543. | சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின், ‘வாம மேகலை மங்கையொடு வனத்துள், யாரும் மறக்கிலா நாம நம்பி, நடக்கும்’ என்று நடுங்குகின்ற மனத்தவாய், ‘யாமும் இம் மண் இறத்தும்’ என்பனபோல் எழுந்தன - யானையே. |
யானை - யானைகள்; சேமம் என்பன பற்றி - தமக்குப் பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி; அன்பு திருந்த இன்துயில் செய்தபின் - இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த பின்பு; வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை யோடு; யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று - காட்டிற்குச் செல்வான் என்று; நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற நெஞ்சையுடையவனவாய்; ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த நாட்டைவிட்டுச் செல்வோம்;’ என்பன போல் - என்று கூறுவன போல; எழுந்தன -கிளம்பின. யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு மிடம்; கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி. யானை - பால்பகாஅஃறினைப் பெயர். 53 |