மகளிர் செயல்கள் 1577. | திரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று, ஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த, இரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப் பொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். |
சேவகன்திரு மணி மகுடம் சூட -(அப்பெண்கள்) வீரனாகிய இராமன் அழகிய இரத்தினம் பதிக்கப்பெற்ற கிரீடம் சூட்டிக்கொள்வதற்கு; செல்கின்றான் என்று - (தேரில்) போகின்றான்என்று அறிந்து; காதலோடு உவகை முந்த - அன்பும் மகிழ்ச்சியும் தூண்டுதலால்; ஒருவரின்ஒருவர் முந்த - ஒருவருக்கொருவர் முற்பட்டு; இருகையும்இரைத்து மொய்த்தார்- இரு பக்கங்களிலும் ஆரவாரித்துக்கொண்டு நெருங்கினார்கள்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் - (அவர்கள்)இனிய உயிர் எல்லார்க்கும் ஒன்றாகி; புறத்திடை பொரு அருதேரில் செல்ல -வெளியில் ஒப்பற்ற தேரில் போக; கண்டார் போல்வார் -அதனைப் பார்த்தவரைப் போல்பவரானார். மகளிர் தம் உயிரெல்லாம் திரண்டு இராமன் என்னும் ஒருவடிவம் கொண்டு புறத்தே போவதைக்கண்டவர் போன்றவர் ஆயினர் என்பது கருத்து. இரு கை - தெருவின் இருபக்கங்கள். 87 |