1620.பொற்புறுத்தன, மெய்ம்மை பொதிந்தன,
சொற்புறுத்தற்கு உரியன, சொல்லினான் -
கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை
வற்புறுத்தி, மனம் கொளத் தேற்றுவான்.

     கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை - கற்பு என்பது  இப்படிப்
பட்டது என்பதைஉலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய
கோசலையை;  வற்புறுத்தி - மனஉறுதிப்படுத்தி; மனம் கொள -
மனத்தில் படும்படி;  தேற்றுவான் - தெளியப்பண்ண வேண்டி; பொற்ப
உறுத்தன -
அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன -உண்மை
நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன - தாய்க்கு மகன் சொல்லுதற்குத்
தகுந்தனவுமாகிய சொற்களைச்; சொல்லினான் - சொன்னான்.

     கல்லின் தன்மை போல உறுதிப்பாடுடைய கற்பு என உரைப்பினும்
அமையும்.  கற்பின் தன்மை உலகம் அறிய உணர்த்திய கற்பு என்பதைச்
‘சீலம் இன்னது  என்று அருந்ததிக்கு அருளிய திருவேஎன்று  (2061.)
இராமன் சீதையை அழைப்பது கொண்டும் அறிக.                    15