1660. | ‘கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்; எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய, மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்!' என்றான். |
‘மகனே! - இராமனே; கண்ணும் நீராய் - கண்கள் இரண்டும் நீராகி; உயிரும் ஒழுக - உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல; கழியாநின்றேன் -இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு - இப்படித் தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர்நான் மறையோர் - மதிக்கப்படும் தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன்நின்மேல் சொரிய - மூடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால் உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி; மண்ணும் நீராய் வந்த புனலை - அபிடேகசுத்த நீராக வந்த தீர்த்த நீரை; (இனி அதற்குத் தேவை இன்மையால்) உண்ணும் நீராய்உதவி - நான் இறந்த பிறகு எனக்குச் செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு); உயர்கான் அடைவாய்' - உயர்ந்த காட்டை அடைவாயாக; என்றான்- முடிபுனைந்து நீராட்டப் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவருவர். அது ‘மண்ணு மங்கலம்' எனப்படும். அதுவே ‘மண்ணும் நீர்' எனப்பட்டது. இறந்த பின் பத்து நாளும் வளர்ந்துஎழுகின்ற பிரேத பூதத்துக்குத் தாகசாந்தி செய்ய நித்தியவதி என்னும் பெயரால் நீர்க்கடன்இறுத்தல் மகனது கடன்; ஆதலால் அதனைத் தயரதன் இராமனைச் செய்ய வேண்டினான். 55 |