1665. | ‘எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும், பொன் - தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே! உன்னைப் பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்!' என்றான். |
உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் - (இராமா!) உன்னிடத்திருந்து உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்; வானே வருந்தாது எனினும் - தேவர்களும் மனம்வருந்தார் ஆனாலும்; பொன்தேர் அரசே! - பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே; தமியேன் புகழே! - துணையில்லாத எனது புகழே; உயிரே! - என் உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் - உன்னைப் பெற்று உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் - பிழைக்க மாட்டேன்; என்றான்- வானும் உலகமும் உன் பிரிவை ஏற்கும் வல்லமை உடையதாயினும் என்னால் அது இயலாதுஎன்றான். ‘பிழையேன், பிழையேன்' புலம்பலில் வந்த அடுக்கு. 60 |