தயரதன் நிலையும் கோசலை புலம்பலும் 1672. | முனிவன் சொல்லும் அளவில், ‘முடியும்கொல்?’ என்று, அரசன் தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்; ‘இந்தப் புனிதன் போனால், இவனால் போகாது ஒழிவான்’ என்னா, மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். |
முனிவன் சொல்லும் அளவில் - முனிவன் இவ்வாறு (இராமனை வனம்போகாது தடுப்பேன்)என்று சொல்லுகின்ற போது; ‘முடியும் கொல’- (இது இவனால்) முடியும்போலும்; என்று-எனக் கருதி; அரசன்- தயரதன்; தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்- தனியாக நின்று (வருந்துகிற) போவது வருவதாய் உள்ள தன்னுடைய உயிரைச் சிறிதளவு தடுத்து நிறுத்தி; இந்தப் புனிதன் போனால் - இந்த வசிட்டன் போய்ச் சொன்னால்; இவனால் போகாது ஒழிவான்' என்னா - இவன் சொற்கேட்டு இராமன்வனம் போகாமல் தங்குவான் என்று கருதி; மனிதன் வடிவம் கொண்ட மனுவும் - மானுடவடிவம் தாங்கியுள்ள வைவஸ்வத மனுச் சக்கரவர்த்தியாகிய தயரதனும்; தன்னை மறந்தான் - நினைவிழந்தான். வசிட்டன் வார்த்தை கேட்டு நம்பிக்கை எய்திப் போகிற உயிரைத் தடுத்து நிறுத்திமூர்ச்சையானான் தயரதன். வைவஸ்வதமனு - சூரியன் மகன் - தயரதன் குலத்து முன்னோன்.ஆட்சிச் சிறப்பாலும், ஆற்றல் முதலியவற்றாலும் அவனை ஒத்தவன் என்றார். 67 |