1686. | ‘ “வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே ஓட்டந்து எதிரா, ‘ நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா, வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர் ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. |
‘வீட்டுஉண்டு - அம்பு விடுதலால் அடிபட்டு; அலறும்குரலால் - கதறுகின்றசப்தத்தால்; வேழக் குரல் அன்று எனவே- யானையின் குரல் அன்று என்று கருதி; ஓட்டந்து - ஓடி; எதிரா- (உங்கள் மகனைச்) சந்தித்து; ‘நீ யார்’ என -நீ யார் என்று(நான் கேட்க குமரன்); உற்ற எலாம் உரையா - நடந்தவை அனைத்தையும்சொல்லி; வாட்டம்தரு நெஞ்சினனாய் - வாடிப் போன மனம் உடையவனாகி; வணங்கா நின்றான்- உங்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து, பேச்சு அடங்கினான்; வானோர் ஈட்டம் எதிர் வந்திட -தேவர்கள்கூட்டம் எதிர்வந்து வரவேற்க; இறந்துவிண்ணிடை - இறந்து மேல்உலகத்தின்கண்; ஏகினன் - சென்றான்: வாட்டம் தரும் நெஞ்சு - தன்னைப் பிரிந்தமையால் கண் இழந்த பெற்றோர் முதுமையில்உதவுவாரின்றி வாடுவர் என்பது பற்றிய வாட்டம் என்க. இறுதி ‘ஏ’ காரம் ஈற்றசை. 81 |